சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் இழுத்தடிப்பு.. ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட்
சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன், 7 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததால் இன்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன்.
இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

புகார்
இந்நிலையில், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்களை அனுப்பினார். அதில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மீது வீண் புகார்களைத் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

7 நீதிபதிகள் அமர்வு
இப்பிரச்சினையை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.

இழுத்தடித்த நீதிபதி
இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிபதி வரவில்லை. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பிடிவாரண்ட்
இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications