கன மழை: கடலூர், புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: கடலூர்,புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் கன மழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுமூறை
இன்றும் கடலூர் மாவட்டத்தில் மழை நீடிப்பதால், அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில், மே.மாத்தூர் 34 மில்லி மீட்டர், வேப்பூர் 22 மில்லி மீட்டர், லால்பேட்டை 21, சேத்தியாத்தோப்பு 20, காட்டுமயிலூர் 17, கீழச்செருவாய் 14.50, கொத்தாவாச்சேரி, காட்டுமன்னார்கோயில் 13, விருத்தாசலம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நெல்லையில் மழை
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அடவி நயினார் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணை பாதியளவு கூட நிரம்பவில்லை. மணி முத்தாறு அணையும் அதே நிலையில் உள்ளது.

நிரம்பும் அணைகள்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் 61 மிமீ மழை பதிவாகியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1112 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104.07 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 20 மிமீ மழை பெய்துள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 21.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. மொத்தம் 132.2 அடி கொண்ட அடவி நயினார் அணையின் நீர் மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் உற்சாகமாக இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications