சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 22ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம்ம் திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 22-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழையால் சென்னை பெருநகரமே வெள்ளத்தால் மிதக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரி நீர் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் திறந்துவிட சென்னையில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை புறநகர் பகுதிகள் மூழ்கித் தீவாக தத்தளிக்கின்றன. படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 23-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் 3 மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்துள்ளனர்.