நளினியின் விடுதலை எப்போது... சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை... தேசிய மகளிர் ஆணைய தலைவர் தகவல்
சென்னை: நளினியின் விடுதலை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு வழியில் நீதிதுறையின் மூலம் போராடி அவர் வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் தன்னை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையத்திற்கு மனு ஒன்றை அளித்திருந்தார்.
இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், நளினி எழுதியுள்ள கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், நளினியின் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள நிலையில், மகளிர் ஆணையம் நளினியின் விடுதலையில் தலையிட முடியுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகளிர் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை நளினி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் சிறையில் தன்னோடு இருந்த பல பெண்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களில் விடுதலையாகி சென்றுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் கழிப்பதாகவும் நளினி அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட பேரறிவாளன், முருகன், சாந்தன் என 7 பேர் சிறையில் இருந்து வருகின்றனர்.