கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 4 பேர் பலி! கண்சிவந்த சீமான்.. அரசுக்கு கண்டனம்
தென்காசி: தென்காசியில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 4 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தென்காசி அருகே, குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் சரக்குந்து மோதி ஒரு குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ள செய்தி பெரும் மனத்துயர் அளிக்கின்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சரக்குந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனிமவளக்கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அவற்றை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களின் விதிமீறல்களும் கட்டற்ற அளவில் நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்திலும் இதுபோல பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்காசியில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவும், சாலை போக்குவரத்து விதிகளைப் புறந்தள்ளியும் கனிம வளங்களைக் கடத்தி வரும் இந்த வாகனங்களையும், கனிம வளக்கொள்ளையில் ஈடுபடும் முதலாளிகளையும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் எவ்வித வளக்கொள்ளையும் நடைபெறக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நடைமுறையில் இருக்கக்கூடிய விதிகளைக்கூட சரிவர செயல்படுத்தாதது அரசின் ஆட்சித் திறனின்மையையே வெளிப்படுத்துகிறது. இனியும் தாமதிக்காமல், இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சரக்குந்துகள் மீதுக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் பெயரில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
கேரளாவில் மலை மற்றும் ஆறுகளிலிருந்து வளங்களை அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கேரளா மினரல் வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து வளங்களை அள்ளி செல்கின்றனர். பல நேரங்களில் இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. கூடுதல் லாரிகள் மூலம் அளவுக்கு மீறி கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படியான லாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது எனவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றும் இப்படியான ஒரு லாரி விபத்தில் சிக்கியிருக்கிறது. தென்காசி - மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே நேற்று காலையில் தனியார் பேருந்து மீது லாரியும் அதிவேகத்தில் மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பேருந்து சாலையில் கவிழ்ந்திருக்கிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்து நடந்த சாலைக்கு என்று வேக கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், தனியார் பேருந்துகள் இதனை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. சில நேரங்களில் போட்டிக்காக பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், விதி மீறலில் ஈடுபடும் லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications