தகப்பனையும், தலைவரையும் கடன் வாங்க முடியாது: சீமான் தடாலடி பேட்டி
சென்னை: பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இருந்தது போதும் இந்தியனாய், திரிந்தது போதும் திராவிடனாய், திரண்டு வா தமிழனாய் என்பது நாம் தமிழர் கட்சி கோஷமாக உள்ளது. தமிழ் மண்ணை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சியில் கடந்த சில நாட்கள் முன்பு சீமான் மாநாடு நடத்தியிருந்தார்.
இந்நிலையில், தந்தி டிவிக்கு சீமான் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் சில துணுக்குகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

யார் தமிழர்?
அந்த பேட்டியில், தொலைக்காட்சி எடிட்டர் ரங்கராஜ் பாண்டே, தமிழர் என்று யாரை வரையறை செய்கிறீர்கள் என்று சீமானிடம் கேட்டதற்கு, "தமிழை தாய் மொழியாக கொண்டு, வீட்டிலும், வெளியிலும் அந்த ஒரு மொழியையே பேசுபவர்களை தமிழர்களாக கருதுகிறோம். அதேபோல நீண்ட காலமாக இந்த மண்ணில், மண்ணும், பொன்னும் எடுத்து வாழ்ந்தவர்கள் அத்தனை பேரையும், நாம் தமிழர் கட்சி தமிழர்களாகவே பார்க்கிறது" என்று பதிலளித்தார்.

சீமான் பதில்
மேலும், தமிழுக்காக உழைத்தவர்களாக இருப்பதால், வெளியில் இருந்து வந்தவர்களானாலும், கார்டுவெல், ஜியூபோப், ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் போன்றோரை நாங்கள் தமிழர்களாகத்தான் பார்க்கிறோம் என்று சீமான் கூறினார்.

பெரியார் வழிகாட்டி
பெரியாரை தமிழர் தந்தையாக ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், பெரியாரை தமிழர்கள்தான் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடத்தாரோ தந்தையாக ஏற்கவில்லை. நாங்கள் பெரியாரை பெருமைக்குறிய வழிகாட்டியாக ஏற்கிறோம்.

தகப்பனை கடன் வாங்க முடியாது
தமிழ்நாட்டில் வாழும் அனைவருமே எங்கள் உறவுகள்தான். ஆனால், தகப்பனையும், தலைவனையும் யாரும் கடன் வாங்க முடியாது. தகப்பன் என்னை பெற்றவராக இருக்க வேண்டும், தலைவன் என் ரத்தவனாக இருக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார். பெரியார் பிறப்பால் தமிழர் அல்ல என்பதால், சீமான் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த முழு பேட்டி, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.












Click it and Unblock the Notifications