ஆர்.கே.நகரில் பணத்தை வாரி இறைத்து வாக்குகளை கொள்ளையடித்து விட்டனர்- சீமான் கண்டனம்
புதுகை: ஆர்கே நகரில் பணத்தை கொடுத்து மக்களின் வாக்கினை வாங்கிய நிலைதான் நடைபெற்றுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சின்னக்கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அவர், "அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்வது என்று பெருந்தலைவர் காமராஜர் கூறி அதன்படியே ஆட்சியை செய்து காட்டினார். அதேபோல எனது தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனும் அரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்வது என்றார். ஆனால் இன்றைக்கு பணம் இருந்தால் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இந்தியா முழுவதும் உள்ளது.

அன்றைக்கு அரசாண்டவன் காசு வைத்திருந்தான், ஆனால் இன்றைக்கு காசு வைத்திருப்பவன் அரசாள்கிறான். இது தான் மக்களாட்சியா? விடுதலைக்காக வ.உ.சி. செக்கிழுத்தார். மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினார்கள். வேலுநாச்சியார் உள்ளிட்டோர் தங்களது உயிரை தியாகம் செய்தார்கள். இந்த பணநாயகத்திற்காகவா அவர்கள் உயிர்நீத்தார்கள். தற்போது அராஜகம், அடக்குமுறை, வன்முறை, உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளது. நியாயவிலைக்கடைகளில் நியாயம் இல்லை. குடி குடியை கெடுக்கும். அப்படியென்றால் குடியை கெடுக்கும் அரசு எதற்கு.
இலவசமாக திருமணம் நடைபெறுவதற்கு எந்த தலைவரின் பிறந்த நாளாவது வராதா என்று ஏங்ககூடிய நிலை இன்றைக்கு காணப்படுகிறது. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியும், ஒரே மாதியான மருத்துவமும் கிடைக்கிறதா என்பதையும் சிந்திக்கவேண்டும். குண்டூசி இலவசமாக வழங்காத அரசு, இலவசமாக அரிசி வழங்குகிறது.
முதலில் கருணாநிதி அரிசியை ரூபாய் 2க்கு கொடுத்தார். பின்னர் ரூபாய் 1க்கு கொடுத்தார். அதன்பின்பு தற்போது ஜெயலலிதா அரிசியை இலவசமாக வழங்குகிறார். அரிசியை இலவசமாக வழங்கும் அரசு, அடிப்படை உயிர் ஆதாரமாக இருக்கக்கூடிய தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்கு தமிழர்களின் வாழ்வதாரம் உள்ளது.
அரசு பேருந்துகள் பலவற்றில் இன்றைக்கு பயணிகள் தொங்கி செல்லக்கூடிய சூழலில் ரூபாய் 44 ஆயிரம் கோடி நட்டம் என்று கூறுவது யாருடைய தவறு. இதற்கு ஆட்சி செய்தவர்கள் அந்தந்த கால கட்டத்தில் சரி செய்திருக்கவேண்டாமா? எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவராக வாக்காளரிடம் சென்று பணத்தை வழங்குகிறார்கள். அந்த அளவிற்கு தேர்தலில் பணத்தை கொடுத்து மதிப்பு மிக்க வாக்கை வாங்கக்கூடிய நிலை காணப்படுகிறது.
2016 சட்டமன்றத்தேர்தலில் எத்தனையாயிரம் கோடி கொட்டப்போகிறார்களோ. தெருவெல்லாம் பணம் கொட்டி கிடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. உங்களிடமும் பணம் இல்லை. உங்களது பிள்ளைகளாகிய எங்களிடமும் பணம் இல்லை" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications