காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் - நாராயணசாமி
சென்னை: காங்கிரஸ், திமுக கூட்டணி மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் என்று புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் கூறினார்.
புதுவையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான திமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணி தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது.

இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அமைச்சர்களுடன் நாளை பதவியேற்க உள்ளார். இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நாராயணசாமி சந்தித்து பேசினார்.
அப்போது புதுவை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க புதுவைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக திமுக பொருளாளர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் நாராயணசாமி.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி ஆகியோரை பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். கூட்டணி தலைவர் என்பதுடன், நாட்டின் மூத்த அரசியல்வாதி என்பதால், கருணாநிதியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் காங்கிரஸ், திமுக கூட்டணி மக்கள் நலத் திட்டங்களை புதுவையில் விரைந்து செயல்படுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications