செந்தில் பாலாஜி எடுத்த காவடி, தீச்சட்டிக்கு பலன் கிடைச்சிருச்சுப்பா...
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போதும், ஜாமீனில் வெளி வந்த போதும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர் அதிமுகவினர்.
அதுவும் அமைச்சர் செந்தில் பாலாஜியோ மாரியம்மனுக்கு தீச்சட்டி, காவடி என எடுத்த கையோடு அங்கப்பிரதட்சனம் செய்து கவனம் ஈர்த்தார். ஜெயலலிதா விடுதலையான உடன் 5000 பேருடன் சென்று மொட்டையும் போட்டார்.
அவர் பட்ட பாட்டுக்கெல்லாம் தற்போது பலன் கிடைக்கும் போல தெரிகிறது. விரைவில் செந்தில் பாலாஜிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் மொட்டை
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது தீபாவளி சமயத்தில் திருப்பதிக்கு சென்று ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக மொட்டை போட்டு திரும்பினார்.
சாமியாராக மாறிய செந்தில்
அடுத்தடுத்து கோவில் வழிபாடு, சிறப்பு பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னி சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்கு பூஜை என அடுத்தடுத்து செய்து வந்த செந்தில் பாலாஜி, தாடி வளர்த்து முழு சாமியாரைப்போல் காட்சியளித்தார்.
காவடி கலாட்டா
கரூர் மாரியம்மனுக்கு தீச்சட்டி ஏந்தினார். அது மட்டுமல்லாது இளநீர் காவடி எடுத்து அங்கப்பிரதட்சணமும் செய்து அசத்தினார்.
பதவியேற்ற பின்னர் மொட்டை
ஜெயலலிதா மீண்டும் முதல்வரான உடன் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி, மீண்டும் கரூர் மாரியம்மன் திருவிழாவில் பிரம்மாண்ட ஊர்வலத்தோடு போய் மொட்டை போட்டதோடு தீச்சட்டியும் ஏந்தினார்.
ஆர்.கே.நகரில் அமர்களம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் எல்லோரும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியோ, தலையில் அதிமுகவின் இரட்டை இலை பல்பு மாட்டிக்கொண்டு தரை லோக்கலுக்கு மாறினார்.
கட்சியில் மாற்றம்
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, நலத்திட்ட உதவிகளை வழங்கிய கையோடு போயஸ் கார்டன் திரும்பினார். அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலன் கிடைச்சிருச்சே
கோவில் கோவிலாக ஏறி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றியதில் ஜெயலலிதாவின் குட்புக்கில் அதிகம் இடம்பெற்றுள்ளது செந்தில் பாலாஜியும், எடப்பாடி பழனிச்சாமியும்தானாம். எனவேதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமி
இதேபோல தமிழக நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.