வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன: ராஜேஷ் லக்கானி
சென்னை: கடந்த இரண்டு தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான வாக்குச்சவடிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேர்தலில் '100% நேர்மை, 100% வாக்குப்பதிவு' என்பதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான வாக்குச்சவடிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
திருமணம் ஆன பெண்கள் முகவரி மாறியிருப்பார்கள். எனவே, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார அலுவலகங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய தகவல்களை வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ பறிமுதல்:
சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், இலவசப் பொருட்களை சோதனை குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆட்டோவில் வாக்கு சேகரித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஜெயராமனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications