வனக்காவலர்களை தாக்கியவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.. திருவண்ணாமலை கலெக்டர் உறுதி
செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை: செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இருந்து கிடந்தார்.
இதனைக்கண்ட உறவினர்கள் வனத்துறையினரால் திருமலை அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். மேலும் திருமலை சாவுக்கு காரணமான வனத்துறை அதிகாரிகளையும் கிராம மக்கள் தாக்கினர்.
இதில் வனத்துறை அதிகாரி தாண்டவராயன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
வனக்காவலரை தாக்கியபோது உடனிருந்த 2 பேர் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறிய கலெக்டர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.