நாட்டரசன் கோட்டை நகரத்தாரின் செவ்வாய் பொங்கல்: வெளிநாட்டினர் பங்கேற்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தினரின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடந்தது. இதில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெரு நகரங்களில் வசித்து வரும் நகரத்தார்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நகரத்தார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வணிகம் செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். நாளடைவில் வணிகத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

துபாய், மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மதுரை, கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் சென்றுவிட்டனர்.
பலரும் வெளியேறி விட்டாலும் ஒவ்வொரு வருடமும் தை மாத முதல் செவ்வாய்கிழமை அன்று சொந்த ஊர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருடத்தில் தை மாதம் வரும் முதல் செவ்வாய் கிழமை நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு அனைத்து குடும்பத்தினரும் இணைந்து சாமி கும்பிடுவது வழக்கம்.

செவ்வாய் பொங்கல்
செவ்வாய் பொங்கல் என அழைக்கப்படும் இந்த நாளில் உறவுகள் ஒன்று கூடுவது மட்டுமல்லாது நகரத்தார் சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் திருமணம் பேசி முடிப்பதும் உண்டு. எனவே வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்தினரும் செவ்வாய் பொங்கலில் தவறாது கலந்து கொள்கின்றனர்.
முதல் மரியாததை
ஒரு குடும்பத்திற்கு ஒரு புள்ளி என வழங்கப்படுகிறது. தை முதல் செவ்வாய்கிழமைக்கு முந்தைய நாளில் அனைத்து புள்ளிகளின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குடத்தில் போட்டு குலுக்குவார்கள். அதில் வரும் ஒரே ஒரு நபருக்கு முன்னுரிமை தந்து முதல் பொங்கல் வைக்க உரிமை தருவார்கள்.

முதல் பொங்கல்
முதல் பொங்கல் வைப்பவர்கள் மண்பானையில் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் வைப்பார்கள்.அவர்களுக்கு மற்றவர்கள் சேர்ந்து முதல் மரியாதை வழங்குகின்றனர். அவர்களது பொங்கல் பானையில் அனைவரும் சேர்ந்து பால் ஊற்றி பொங்கல் வைபவத்தை தொடங்குகின்றனர்.
கண்ணாத்தாள் கோவில்
இந்தாண்டு மொத்தம் 900 புள்ளிகளின் பெயர்கள் எழுதி சீட்டு குலுக்கினர். இதில் தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் லக்குமண செட்டியார் பெயர் வந்ததை அடுத்து அவருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு கோயில் வாசலில் லக்குமண செட்டியார் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கண்ணாத்தாளை வழிபட்டார்.
900 பொங்கல் பானைகள்
இதனைத் தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் நகரத்தார் சமூகத்தினர் 900 பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நள்ளிரவு கிடாவெட்டு விருந்து வைபவம் நடைபெற்றது.
வெளிநாட்டினர் வருகை
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் இவ்விழாவுக்கு வந்தனர். அவர்களுக்கு கரகாட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளும் கரகாட்டம் ஆடினர். இத்தாலி மாணவர் லியோ, பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அனைவரும் ஒன்று கூடி விழா நடத்துவதை நான் பார்த்தது இல்லை. இதை ஆச்சரியமாக பார்க்கிறேன். இவ்விழாவில் மாப்பிள்ளை, பெண் தேடும் தமிழ் கலாசாரம் பாராட்டுக்குரியது, என்றார்.
150 ஆண்டுகால பாரம்பரியம்
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நகரத்தார் சமூகத்தினரால் பின்பற்றப்படும், "செவ்வாய் பொங்கல்' விழா 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உறவுகளை வலுப்படுத்தவும் புதிய உறவுகளை உருவாக்கவும் இந்த பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவதாக நகரத்தார் சமுதாயத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications