பட்டாசு தொழிலுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்: சுதர்சன நாச்சியப்பன் தகவல்!

தேசிய அளவிலான பட்டாசு தொழில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு சிவகாசியில் தொடங்கியது. விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் தலைமை தாங்கினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசியதாவது:
‘‘சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலில் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். ஆபத்தான பட்டாசு தொழிலை, பாதுகாப்பான தொழிலாக மாற்றிட மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிவகாசி பகுதியில் 800க்கு அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கினாலும் 370 பட்டாசு ஆலைகளில் விபத்தே நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்களை குறைக்கவும், விபத்து இல்லாத தொழிலாக பட்டாசு தொழிலை மாற்றுவதற்கு, மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
விபத்தில்லாமல் செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மற்றும் எம்.ஜி.ஆர். பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருதும், 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
சிவகாசி பட்டாசு தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. சிவகாசியில் இருந்து வெளிநாடுகளுக்கு பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்திட தயாராக இருக்கிறது. அதே சமயம், சட்ட விரோதமாக சீனாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் பட்டாசுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தூத்துக்குடி துறைமுகத்தில் தனியாக பட்டாசு குடோன் ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
பட்டாசு தொழிலை மேம்படுத்த, சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு என்று தனியாக சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் ஏற்படுத்தப்படும். இதற்காக பட்டாசு ஆலை அதிபர்கள் 200 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு முன் வந்தால் மத்திய அரசு சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications