மாட்டுக்கறி தின்றால்.. கண்ணை குத்துவார்களா.. ஐஐடியைக் கண்டித்து எஸ்எப்ஐ பேரணி
மாட்டுக்கறி விழா நடத்தியதால் ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஐஐடி வளாகத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கினார்கள்.
ஐஐடி நோக்கி பேரணி
இதனை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி வளாகத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள். கிண்டியில் இருந்து பேரணியாக ஐஐடி நோக்கி சென்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடியை முற்றுகையிட முயன்றனர்.
தடுத்து நிறுத்தி..
அவர்களை பாதியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு, அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மாட்டிறைச்சி தடையை திரும்பப் பெற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
ஏபிவிபியை தடை செய்..
அப்பாவி மாணவர் மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையான மருத்துவம் செய்யப்பட வேண்டும். கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கைது
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், சூரஜ் கண்ணை குத்திக் கிழித்திருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஐஐடி நிர்வாகம் குண்டர்களுக்கு துணை போகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்கள்.