கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து, நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் 6 மாடி கட்டிடம் உள்ளது.
6வது மாடியில் முதல்வரின் விரிவாக்க காப்பீடு திட்டம் தொடர்பான சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் அறுவை சிகிச்சை நோயாளிகள் வார்டும் உள்ளது. குடல், வயிறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சை இங்கு செய்யப்படுகிறது.
இன்று காலை 8 மணியளவில் 6 வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார் மீது விழுந்து தரையில் மோதியதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். குதித்த நபர் காரிலிருந்து இறங்கிய நர்ஸ் பாப்பாத்தியின் தோள்பட்டை மீது விழுந்ததால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் கார் கண்ணாடி மற்றும் கதவும் உடைந்தது. பாப்பாத்திக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்ததும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், உறவினர்கள் பதறியடித்து ஓடினர். தகவல் அறிந்ததும் கீழ்பாக்கம் மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மருத்துவமனையில் 6&வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கீழ்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்டவர், சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த குமார் (55) என்பது தெரிந்தது. இறந்த குமாருக்கு சுப்புலட்சுமி (49) என்ற மனைவியும் பிரபு (25) என்ற மகனும் உள்ளனர்.
சமையல்காரரான இவர், குடிபோதைக்கு அடிமையானார். இதிலிருந்து விடுபடுவதற்காக சிகிச்சை பெற வந்துள்ளார். ஆனால், குடிப்பழக்கத்தை விட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும் நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.