சென்னையில் தலை விரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்.. ஒரு குடம் தண்ணீர் விலை என்ன தெரியுமா?
சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது ரூ.10-க்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சென்னைவாசிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு வடக்கிழக்கு பருவமழையின் போது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய நீரை சேகரிக்க தவறியதால் அந்த நீர் அனைத்து கடலில் சென்று கலந்தது.
இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. பயிர்கள் காய்ந்து போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மண்டையை பிளக்கும் வெயில்
இன்னும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெ்ளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி கிடக்கின்றனர்.

சோழவரம் ஏரி வறண்டது
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டது. 881 மில்லி கனஅடி இருந்த நிலையில் தற்போது வெறும் 6 மில்லி கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள நீரைக் கொண்டு சென்னை மக்களுக்கு எத்தனை நாள்கள் தண்ணீர் விநியோகிக்கலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

புழல் ஏரிக்கு நீர் நிறுத்தம்
சோழவரம் ஏரி வறண்டதால் அங்கிருந்து ராட்சத குழாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு குடம் தண்ணீர் ரூ.10
தனியார் பால் விலையேற்றம், தமிழகத்தில் வாட் வரி உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் கொடுங்கையூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் கொண்டு வரும் தனியார் லாரிகளில் ஒரு குடத்திற்கு அதிக பட்சமாக ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது.

கோடைக்கு முன்பே
கோடைக் காலத்துக்கு முன்பே இத்தகைய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு குடம் ரூ.10-க்கு விற்கப்படுவதால், இன்னும் கத்தரி வெயிலின்போது நிலைமை என்னவாக இருக்கும் என்று மக்கள் வேதனைப்பட ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications