குஷ்புவுக்கு மட்டும்தானா, "பரவை"க்கும் பரிவு காட்ட வேண்டியதுதானே இளங்கோவன்.. ராமராஜன் அட்டாக்!
சேலம்: நடிகை குஷ்புவுக்கு மட்டும் பரிவு காட்டும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பரவை முனியம்மாவுக்கும் அதே அளவிலான பரிவைக் காட்ட வேண்டியதுதானே என்று அதிமுக நடிகர் ராமராஜன் சாடியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிச் சாடினார் ராமராஜன்.
கூட்டத்தில் ராமராஜன் பேசியதாவது:

சரி செய்த அதிமுக அரசு
கடந்த ஆட்சி காலத்தில் அரசின் மெத்தன போக்கால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை அதிமுக அரசு சீரிய முயற்சியால் சரி செய்தது. இத்துடன் மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

கல்விக்கு அதிக நிதி
எதிர்காலம் நமது மாணவர்கள் கையில் உள்ளது என்பதை நன்கு உணர்ந்து கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குவதுடன் பல்வேறு கல்வி உதவி திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

ஆடு மாடு.. தாலிக்குத் தங்கம்
ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர் செயல்படுத்தி வரும் விலையில்லா ஆடுகள், பசு மாடு, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களையும் பெண்களின் மீது அக்கறையுடன் அவர் அறிவித்த விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம் இன்றளவும் நாடு முழுவதும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

கொச்சைப்படுத்திய இளங்கோவனே
அதே போல் மாநில நலனுக்காக முதல்வர் பிரதமரிடம் பேசியதை கொச்சைப்படுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பார்த்து கேட்கின்றேன். நடிகை குஷ்புவை டெல்லி வரை அழைத்து சென்று கட்சியில் இணைத்து பரிவு காட்டும் நீங்கள் நடிகை பரவை முனியம்மாவுக்கு அதே அளவு பரிவை காட்டுவீர்களா?

விஜயகாந்த்துக்கு ரொம்பத்தான் ஆசை
அதே போல் விஜயகாந்த் பேராசைபடுகிறார். எந்த ஒரு கட்சியிலும் அடிமட்ட தொண்டனாய் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் மட்டுமே நாட்டை ஆள பொருத்தமானவர்கள்.

144 படங்கள் வரை சும்மா இருந்து விட்டு
ஆனால் விஜயகாந்த் 144 படங்கள் நடிக்கும் வரை நாட்டு மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காமல் திடீரென குடும்பத்துடன் அரசியலில் நுழைந்து முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது அவரது பேராசையை காட்டுகிறது என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications