திண்டுக்கல் அருகே டாஸ்மாக் பாரில் ரகளை: தடுக்கச் சென்ற எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை சிலர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மாணிக்கம். இவர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்து கொண்டிருப்பதாக சாணார்பட்டி காவல்நிலையத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கம் தகராறில் ஈடுபட்டிருந்தவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மாணிக்கத்தை தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கிருந்து மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.