மனைவியை ஆடிக்கு அனுப்பிவிட்டு உல்லாசம்: சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்த கள்ளக்காதலி!
சிதம்பரம்: சிதம்பரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மனைவியை ஆடிக்கு மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தனது கள்ளக்காதலியுடன் விடிய விடிய உல்லாசமாக இருந்தார். அந்தக் கள்ளக்காதலியோ, தன்னை விட்டு விட்டு இன்னொருவரை மணந்து கொண்ட ஆத்திரத்தில் அந்த சப் இன்ஸ்பெக்டரைக் கொலை செய்து விட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் கணேசன் (31). சொந்த ஊர் பண்ருட்டி. சிதம்பரம் சக்ரா அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இவருக்கு கடந்த 9 ந்தேதி திருமணம் நடந்தது. மனைவி பெயர் சத்யா.
ஆடி மாதத்தையொட்டி தனது மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் கணேசன். இந்த நிலையில், நேற்று இரவு சத்யா, தனது கணவருக்குப் போன் செய்தார். ஆனால் போன் போய்க் கொண்டே இருந்தது. இதனால் பயந்து போன அவர் சிதம்பரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவருக்குப் போன் செய்து, வீ்ட்டுக்குப் போய்ப் பார்க்கக் கூறினார். அவரும் வீட்டுக்கு வந்தார்.
ஆனால் வீடு வெளிப்பக்கமகா பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் அவர் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு கணேசன் கட்டிலில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அவரது உடல் ரத்த வெள்ளத்தில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்தனர்.
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ஒரு பெண் கணேசன் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அந்த விசாரணையில் வீட்டில் இருந்தது வனிதா என்ற பெண் என்பதும், அவர் கணேசனின் கள்ளக்காதலி என்றும் தெரிய வந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே வனிதாவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் கணேசன்.
இதையடுத்து வனிதாவைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். இதில் சேலம் பஸ்சில் வனிதா இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் மடக்கிப் பிடித்து அவரை விசாரித்தனர். விசாரணையில் தான் தான் கொலை செய்ததாக வனிதா ஒப்புக் கொண்டார்.
யார் இந்த வனிதா....
சிதம்பரம் கிள்ளைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. இவருடைய மனைவிதான் வனிதா. இவருக்கும் ஒரு மினி பஸ் டிரைவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருமுறை ரெய்டின்போது இருவரும் போலீஸில் சிக்கிக் கொண்டனர். அந்த வழக்கை விசாரித்தவர்தான் கணேசன்.
வனிதாவைப் பார்த்த கணேசன் அவர் மீது மோகம் கொண்டார். புரிந்து கொண்ட வனிதாவும் கணேசனுக்கு உடன்பட்டார். இருவரும் கள்ளக்காதலில் திளைத்து வந்தனர். தனது போலீஸ் குடியிருப்பு வீட்டுக்கு அடிக்கடி வனிதாவை அழைத்து உல்லாசமாக இருப்பாராம் கணேசன்.
இந்த நிலையில்தான் கணேசனுக்குத் திருமணமானது. ஆனால் அதை வனிதா விரும்பவில்லை. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை, திருமணத்தையும் தடுக்க முடியவிலல்லை. இந்த நிலையில்தான் நேற்று மாலை வனிதாவை அழைத்துள்ளார் கணேசன். அவரும் வந்தார்.
இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு மது அருந்தினர். கணேசன் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். போதையில் மயங்கிக் கிடந்தார். அப்போது வனிதா கத்தியை எடுத்து சரமாரியாக கணேசனை வெட்டித் தள்ளியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பிணமானார். பின்னர் வனிதா தப்பி விட்டார்.
வனிதாவுடன் வேறு யாரேனும் கொலையில் ஈடுபட்டனரா என்பது குறித்துத் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவம் சத்யா!