சிம்பு, அனிருத்துக்கு போலீஸ் சம்மன்... கைது எப்போது?
பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத்துடன் உருவாக்கி வெளியிட்டு, கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதற்கு விதவிதமாக விளக்கம் கூறி வரும் சிம்பு, அனிருத்துக்கு நேரில் சம்மன் வழங்கினர் கோவை போலீசார்.
தமிழ் சமூகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது சிம்புவும், அனிருத்தும் செய்துள்ள வேலை. இளம் கலைஞர்கள் என்று இவர்களுக்கு இத்தனை காலமும் ஆதரவு தந்ததை நினைத்து ஒவ்வொருவரும் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.

இந்தப் பாடலை உருவாக்கி வெளியிட்டதற்காக இருவரையும் கைது செய்யுமாறு கோவையைச் சேர்ந்த மகளிர் அமைப்புகள் போலீசில் புகார் தந்தனர். அதன்பேரில் அனிருத், சிம்பு இருவர் மீதும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் இவை.
இந்தப் புகாரின்பேரில் இருவரையும் கைது செய்ய கோவை போலீசார் இன்று சென்னை வந்தனர். அவர்கள் இருவர் வீடுகளுக்கும் சென்று சிம்புவும் அனிருத்தும் நேரில் வந்து விளக்கம் தருமாறு சம்மனை வழங்கினர்.
சிம்பு வீட்டில் ராஜேந்தர் வந்து சம்மனைப் பெற்றுக் கொண்டார். அனிருத் வீட்டிலும் சம்மனைப் பெற்றுக் கொண்டனர்.
அடுத்த கட்டமாக இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சிம்பு, அனிருத்தைக் கைது செய்யக் கோரி மேலும் ஒரு புகார் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி தலைமையில் ஏராளமான பெண்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பொன்னுசாமி நம்மிடம் கூறுகையில், "பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்திலேதான் இப்படியொரு பாடலை திட்டமிட்டே எழுதி பாடி வெளியிட்டுள்ளனர்.இதற்காக துளியும் வருத்தம் தெரிவிக்காமல் தங்களின் செயலுக்கு நியாயம் கற்பித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக வருகிற தகவல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஒவ்வொருவர் வீட்டிலும் உயர்வாக மதித்து போற்றிடும் பெண்களை இழிவு படுத்தியிருக்கும் சிம்பு, அனிருத் இருவரையும் சமூக நலன் கருதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications