சென்னை: ரெயின்ட்ரி நட்சத்திர ஹோட்டல் 10–வது மாடியில் இருந்து குதித்து எஞ்ஜினீயர் தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள ரெயின் ட்ரி நட்சத்திர ஹோட்டலின் பத்தாவது மாடியில் இருந்து சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலைப்பாலையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(22). சாப்ட்வேர் என்ஜீனியரான இவர், புனேவில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பரமேஸ்வரனை பெங்களூர் கிளைக்கு அந்நிறுவனம் இடமாற்றம் செய்தது. சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பரமேஸ்வரன், கடந்த 31ம் தேதி சென்னை திரும்பினார்.
ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் தேனாம்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற பரமேஸ்வரன், அங்கு மது குடித்துவிட்டு உணவு சாப்பிடுவதற்காக ஹோட்டலின் 10 வது மாடிக்கு சென்றார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பரமேஸ்வரன் ஹோட்டல் ஊழியரிடம் பீர் வேண்டும் என்று கூறியுள்ளார். ஊழியர் பீர் கொண்டு வருவதற்கு சென்ற போது திடீரென பரமேஸ்வரன் 10வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பரமேஸ்வரன் உடலை கைப்பற்றி சோதனை செய்தனர்.
பரமேஸ்வரனின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பரமேஸ்வரன் தற்கொலைக்கு பணிச்சுமையா அல்லது காதல் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமேஸ்வரன் தற்கொலை செய்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.