ஒரு "செல்லூர் ராஜூ" இருக்கலாம்... ஆனால் நாலைந்து இருந்தால் எப்படி?
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சில அமைச்சர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சில அமைச்சர்களின் பேச்சு சர்ச்சைக்குரிய வகையிலும் உளறிக் கொட்டிக் கிளறி மூடுவது போலும் உள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை முக்கிய அமைச்சர்களை தவிர்த்து மற்றவர்களின் புகைப்படத்தை அவர்கள் ஜெயிக்கும் போது நாளிதழ்களில் வெளியிடப்படுவதும் போதும், தமிழக அரசின் இணையதளத்திலும் மட்டுமே பார்க்க முடியும். ஏன் அவர்களின் குரலை கூட கேட்டிருக்க மாட்டோம்.
அந்தளவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சில அமைச்சர்களுக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் இருக்கின்றனர். அந்த வகையில் அவ்வப்போது உளறி கொட்டுபவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆவர். அந்த வரிசையில் தற்போது செங்கோட்டையனும் இணைந்து விட்டார்.

கலக்கல் பேச்சு
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார். பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் அவர் பரத நாட்டிய கலைஞர் என்றும் கூறி சமூகவலைதளங்களில் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

மதுரை கோயில்
இதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தை மரணம் குறித்து துக்கம் விசாரிக்க சென்ற அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எச் ராஜாவின் தந்தை மரணத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீவிபத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் இறைவன் அருளால் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

சமூக வலைதளவாசிகளின் சயின்டிஸ்ட்
அமைச்சர் செல்லூர் ராஜூ உளறுவதில் கைதேர்ந்தவர் என்று சொல்லும் அளவுக்கு உளறி கொட்டுகிறார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அதிமுக உறுப்பினர் அட்டை என்பது உயிர் போன்றது. அதை வைத்திருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டு பின்பு தான் அதுபோல் கூறவே இல்லை என்று சாதித்தார். வைகை ஆற்றில் நீர் ஆவி ஆவதை தடுக்க தெர்மாகோல் போட்டு நகைப்புக்குரிய நிலைக்கு சென்றவரும் இவர்தான்.

வரிசையில் சேர்ந்தார்
உளறல் அமைச்சர்களின் பட்டியலில் அண்மையில் இணைந்தவர் அமைச்சர் செங்கோட்டையன் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழா நிகழ்ச்சியில் இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதில்லை என்ற இஸ்லாமிய மக்களுக்கான நாகூர் ஹனிபாவின் பாடல் பைபிளில் கூறப்பட்டுள்ளது என்றார். இந்த சர்ச்சை முடிவதற்குள் இன்று கோபியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியபோது அதிமுக உறுப்பினர்கள் கைகாட்டும் நபருக்கே அரசு வேலை என்று அரசு வேலை கிடைக்க புதியதொரு இலக்கணத்தை கண்டுபிடித்துள்ளார்.

வாரும் நெட்டிசன்கள்
அதிமுக உறுப்பினர்கள் கைகாட்டும் நபருக்கே அரசு வேலை என்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எதற்கு நடத்துகிறீர்கள் என்று சமூகவலைதளங்களில் கேள்வி கணைகள் தொடுக்கப்படுகின்றன. மேலும் ஜெயலலிதா இவர்களை ஏன் பேசவிடாமல் ராணுவ கட்டுக் கோப்புடன் வைத்திருந்தார் என்பது இவர்களின் செயல்பாடுகளில் புரிவதாகவும் மரண கலாய் கலாய்க்கின்றனர். மேலும் "செல்லூர் ராஜூ"வின் உளறலையே தாங்க முடியவில்லை, இதில் அதிமுகவில் நாலைந்து "செல்லூர் ராஜூ"க்கள் இருந்தால் எப்படி என்று கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications