மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை கடத்திய மருமகன் கைது
சென்னை: குடும்பம் நடத்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை கடத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து கோபம் அடைந்த விஜயா கடந்த வாரம் பெருங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். ரமேஷ் சமாதானம் பேசியும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் செவ்வாயன்று காலை ரமேஷ், நண்பர்கள் சுரேஷ், கமலக்கண்ணன் ஆகியோருடன் காரில் மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி விஜயா வீட்டில் இல்லை.
அவர் தனது மாமியார் அபிராமியிடம் மனைவியை அனுப்பி வைக்குமாறு கேட்டாராம். ஆனால் அதற்கு ஒப்புகொள்ளாத அவர் ரமேசை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் அபிராமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் சோதனை சாவடி அருகே கடக்கமுயன்ற காரை போலீஸார் மடக்கி பிடித்து அபிராமியை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அவரது மருமகன் ரமேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.