மனைவியை அனுப்ப மறுத்ததால் கோபம்.. மாமனார் காதைக் கடித்துத் துப்பிய மருமகன்!
ஈரோடு: ஈரோடு அருகே அம்மா வீட்டிலேயே தங்கிக் கொண்டு, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கோபமடைந்த கணவர் அவரை குடும்பம் நடத்தக் கூப்பிட்டார். அதற்கு அவரது மாமனார் மறுத்து மருமகனைத் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த மருமகன், மாமனாரின் காதைக் கடித்துத் துப்பி விட்டார்.
ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் கல்லூரிப் பேருந்தில் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி பெயர் சுமதி. சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மூன்று ஆண்டுக்கு முன் முருகேசன்-சுமதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கணவரை பிரிந்து சென்ற சுமதி சில மாதங்களுக்கு பிறகு, வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அவரை விட்டு பிரிந்த சுமதி சில வாரங்களுக்கு முன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதை தெரிந்துகொண்ட முருகேசன், மாமனார் வீட்டுக்கு சென்று மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், சுமதி முருகேசனுடன் வர மறுத்து விட்டார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மருமகன் முருகேசனை, மாமனார் சுப்பிரமணியன் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன், மாமனாரின் வலது காதை ஆவேசத்துடன் கடித்து துப்பினார். வலியால் துடித்த சுப்பிரமணி, மருமகனை அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கியுள்ளார்.
இதனால், வலி தாங்க முடியாமல் அங்கிருந்து முருகேசன் ஓடி விட்டார். கடிபட்ட சுப்பிரமணியனும், கடித்த முருகேசனும் தனித் தனியாக போய் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் முருகேசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.