ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா கடிதம்- சோனியா காந்தி ஏற்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமா கடிதத்தை, சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. 40க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இளங்கோவனுடன் தங்கபாலு, ப.சிதம்பரம், விஜயதரணி, ஜோதிமணி, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத்,உள்ளிட்டவர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில், தேர்தல் தோல்வியை தொடர்ந்து இளங்கோவன், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் கலகக்குரல்கள் பல மட்டத்திலிருந்தும் எழத்தொடங்கின.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி குறித்து பேட்டி அளித்த விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்கினார் இளங்கோவன். ஆனால் அவர் தனது நீக்கம் செல்லாது என இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இவரைத் தவிர முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு உள்ளிட்டவர்களும் டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இளங்கோவன் உடனான மோதலால் மாநில மகளிரணி தலைவி பதவி போனாலும் டெல்லி அளவில் செல்வாக்குள்ள பதவியை பெற்றதோடு, சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் சீட் பெற்று, மீண்டும் வெற்றியும் பெற்று விட்டார் விஜயதரணி. ஆனால் அவருக்கும் இளங்கோவன் மீதான கோபம் தணியாமல்தான் உள்ளதாம்.
ஜோதிமணியை பொறுத்தவரை அவர், இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தவர்தான். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே, அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் மக்களை சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டும் வேலைகளை தொடங்கியிருந்தார்.
இளங்கோவனும் அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாராம். ஆனால் திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் அரவக்குறிச்சியை திமுக எடுத்துக்கொள்ளவே கொந்தளித்தார் ஜோதிமணி.
அதே தொகுதியில், தான் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். "ராகுல் காந்தி அரவக்குறிச்சியை எனக்கு ஒதுக்கச் சொல்லி பேசுமாறு சொல்லியும், எனக்கு சீட் கிடைக்காமல் சதி செய்தது இளங்கோவன்தான். இந்தத் தொகுதியைப் பெறுவதற்கு இளங்கோவன் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அடுத்த தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியில் வளருவதை இளங்கோவன் விரும்பவில்லை" என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதனையடுத்து, 'தலைமையின் முடிவைத் தாண்டி ஜோதிமணி போட்டியிட்டால் அவரைக் கட்சியை விட்டு நீக்குவோம்' என எச்சரித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இதனையடுத்து அப்போதைக்கு ஜோதிமணி அடங்கிப்போனாலும், தேர்தல் முடிவுக்கு பின்னர் இளங்கோவனுக்கு எதிராக கட்சித்தலைமையிடம் புகார் பட்டியல் வாசிக்கும் அதிருப்தி தலைவர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துகொண்டார்.
கட்சிக்குள் நாலாபுறமும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்தே, டெல்லி சென்ற இளங்கோவன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 14 ம் தேதியன்று சந்தித்தாராம். அவரிடம் தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலவரம் மற்றும் உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட விவரங்களை ராகுல் கேட்டாராம்.
தனது தரப்பு நியாயத்தை ராகுல்காந்தியிடம் விளக்கியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இளங்கோவன் 3 நாட்கள் காத்திருந்தும், அவரை சந்திக்க சோனியா மறுத்துவிட்டதாகவும் டெல்லி வட்டராக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்தே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கடந்த15 ம் தேதியன்று பதவி விலகல் கடிதத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என, காங்கிரஸ் கட்சி மேலிடம் தெரிவித்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், ராஜினாமா கடிதத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிறன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் 40 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் இளங்கோவன். இந்த கூட்டத்தில் இளங்கோவனின் ராஜினாமாவை திரும்பப் பெறும்படி அனைவரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளங்கோவனின் ராஜினாமா கடிதத்தை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அக்கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications