மேலிடம் விளக்கம் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் நடக்கவில்லையே: இளங்கோவன் தடாலடி
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான விமர்சனம் குறித்து மேலிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 11 மணிக்கு இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டசபையில் ஜெயலலிதா 110-வது விதியின்கீழ் வெளியிடும் அறிவிப்புகளுக்கு 144 போடுங்கள் (தடை போடுங்கள்) என்று கேட்கிறோம். ஆனால், அந்த அம்மையார் கேட்பதில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், திமுகவின் ஸ்டாலின், காங்கிரசின் விஜயதாரணி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போன்ற எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு தருவதில்லை.
ஜெயலலிதாவுக்கு புகழ்மாலை சூட்டி பேசுவோருக்கும், ஜால்ரா அடிக்கும் சரத்குமார் போன்றோருக்குதான் சட்டசபையில் பேச வாய்ப்பு தரப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நான் டெல்லிக்கு சென்றிருந்தேன். ஆனால், நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க சென்றதாகவும், அவரோ அல்லது ராகுல் காந்தியோ எனக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தவறான தகவல்.
நான் வழக்கமான பணிகளுக்காகவே டெல்லி சென்றேன். மேலும், தமிழகத்தில் அவ்வளோ பெரிய விஷயம் ஒன்றும் நடக்கவில்லை (ஜெ.-மோடி சந்திப்பு பற்றிய விமர்சனம் மற்றும் அதை சார்ந்த போராட்டங்கள்). எனவே, காங்கிரஸ் மேலிடம் என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.
எனக்கு எதிராக பெண் தொடர்ந்துள்ள வழக்கில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. அந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். அவதூறு வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன். தமிழகத்தில் முன்பைவிட அதிக வீரியத்தோடு மது விலக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளவர்களாலேயே சதி செய்யப்படுகிறது என்று சொன்னீர்களே, யார் அவர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு "அவர் இருமுறை காங்கிரஸ் தலைவராக பதவியில் இருந்துள்ளார். அவரது பெயரை சொல்லும் அளவுக்கு அவர் 'தங்கமான' மனிதர் கிடையாது" என்று இளங்கோவன் பூடகமாக பதில் அளித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியை உடைப்பது இமயமலையை உடைப்பதற்கு சமம். சூழ்ச்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது. காங்கிரசின் உண்மையான தொண்டர்கள் ஒரே அணியாக உள்ளனர். சோனியாவும், ராகுலும்தான் எங்களுக்கு தலைவர்கள் என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த இளங்கோவன், ஜெயலலிதாவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தனது தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications