ஏப்ரல் 16ல் தமிழகம் வருகிறார் சோனியா - ராகுல் வருவது சந்தேகம்தான் – ஞானதேசிகன்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி வரும் 16 அல்லது 17ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி இன்றி தனித்துவிடப்பட்டுள்ளது.
கூட்டணிக்காக அக்கட்சியின் தமிழக தலைவர்கள் எவ்வளவு முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை.

வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மீண்டும் வாய்ப்பு:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் 6 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டனர்.

”தொப்பி” கார்த்திக் ஆதரவு:
இப்படிப்பட்ட பரப்பரப்பான நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் மட்டும் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் இறுதிக்கட்டத்தில்தான் சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்:
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வெவ்வேறு நாட்களில் வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

சோனியா மட்டும் தனியா:
ஆனால், இப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மட்டும் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 16 அல்லது 17ஆம் தேதி வருவார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ராகுல் வருவது சந்தேகம்தான்:
நாகர்கோவிலில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்கவிருப்பதாக ஞானதேசிகன் கூறியுள்ளார்.ஆனால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வருவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications