பிடிவாரண்ட்டை ரத்து செய்ய நீதிமன்றத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் மனு!
நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் விதித்த பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வலியுறுத்தி நடிகர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நீலகிரி: பத்திரிக்கையை கடுமையாக விமர்சித்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்ததை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.
தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைக்கு நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் ஆஜராகாததால் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகும் நோக்கில் நடிகர்கள் 8 பேர் தரப்பில் வழக்கறிஞர் விஸ்வநாத் பிடியாணையை ரத்து செய்ய வலியுறுத்தும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.