சட்டசபையில் கிண்டலாக முகபாவனை செய்த எம்எல்ஏ.. ட்ரெண்ட் ஆன வீடியோ.. எச்சரித்த சபாநாயகர்
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் சீரியஸாக காவிரி பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் விஜய்யை கிண்டலடித்து முகபாவனை செய்து பேசியதாக கூறப்படுகிறது. முகத்தை உம்மென்று வைத்து கிண்டலாக பாவனை செய்தனர். இது சட்டசபையில் நேரலையாக ஒளிபரப்பானது. இது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் இனி இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று காலை சட்டப்பேரவையில் பேசும் போது, பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. ஏனென்றால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள், அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களை கேலி செய்யும் வகையில் செய்த முகபாவனைகள் , சைகை மொழியில் பேசியவை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

இது சட்டமன்ற பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் வகையிலான செயலாகும். இந்தியாவில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு எடுத்துக்காட்டாகும், நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட இந்த மாமன்றத்தின் மரபினை காத்திடும் வகையிலும், கண்ணியத்தையும், மாண்பையும் உயர்த்தி பிடிக்கும் வகையிலும், பேரவையில் நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதால், மாண்புமிகு உறுப்பினர்கள், தங்களது பொறுப்புகளையும், கடமையையும் உணர்ந்து, இதுபோன்ற கண்ணியக்குறைவான செயல்களை இனி வரும் காலங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துகிறேன்.. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அவையின் உரிமை மீறலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
அதேபோல் சபாநாயகர் மேலும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி நீதிமன்ற வழக்குகளை அவையில் பேசக்கூடாது. யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசக்கூடாது. பேசவதற்கு அனுமதி கோரியபோது எடப்பாடி பழனிசாமி, எ.வ.வேலு ஆகியோரின் மைக் அணைக்கப்பட்டது.
பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் உறுப்பினர்கள் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவையில் கண்ணியத்துடன் பேச வேண்டும்.பேரவை நேரலையின்போது உறுப்பினர்கள் முகபாவனை, கேலி செய்யும் பேச்சு வலைதளத்தில் பரவி உள்ளதை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்தார்.
கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும் செயலில் ஈடுபட்டால் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது, விவாதத்தின்போது பேசும் உறுப்பினர்கள் short and sweet ஆக பேச வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.














Click it and Unblock the Notifications