காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
Recommended Video
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் வகையில் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
காவிரி படுகையை 2 மண்டலங்களாகப் பிரித்து, 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்தாண்டு அனுமதி வழங்கியது. ஓஎன்ஜிசி, வேதாந்தா, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான 5-ஆவது ஏலத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் இந்த ஏலத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சேலம் தலைவாசல் அருகே கடந்த 9-ம் தேதி நடந்த விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொடுக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். அதன்படி இன்று தமிழக சட்டசபையில் காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதை முதல்வர் தாக்கல் செய்தார். அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகியன பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும் வேளாண் மண்டலத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மண்டல சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர், துணை முதல்வர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்படவுள்ளனது. பின்னர் ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்ததில் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்தார்.
மொத்தம் 8 மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என கூறிவிட்டு கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்க்கப்படாதது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மசோதாவை சட்டசபை தேர்வுக்குழுவுக்கு அனுப்பிய பிறகே அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக திருச்சி இருப்பதால் அதை வேளாண் மண்டலமாக சேர்க்கவில்லை என முதல்வர் விளக்கம் அளித்தார். எனினும் அதை ஏற்க மறுத்து திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.












Click it and Unblock the Notifications