வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா? தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்
சென்னை : வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களில், இன்று சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்தின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது ஆகிய பணிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கான சிறப்பு முகாம் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது என்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர், உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, elections.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரியிலும், வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.