ரேஷன் கார்டு.. அலையவே வேண்டாம்.. ஜஸ்ட் வந்தால் போதும்.. கலக்கும் கன்னியாகுமரி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்ய ஆன்லைனிலேயே இன்றைக்கு செய்ய முடியும். ஆனால் ஏழைகள், மற்றும் ஆன்லைன் முறைகள் குறித்த போதிய தகவல்கள் தெரியாத பல லட்சம் மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தாசில்தார் ஆபிஸ் போய் தான் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதேபோல் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்யவும் நேரில் போக வேண்டியதிருக்கும்.

அடிப்படையில் பல கூலித்தொழிலாளிகள் ஒரு நாள் ஊதியத்தை விட்டு வந்து தான் மாற்ற வேண்டிய நிலை இன்றும் நம் நாட்டில் இருக்கிறது. சில நேரங்களில் உடனே முடிந்துவிடாது. பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இந்நிலையில் பொதுமக்கள் அரசின் அனைத்து வசதிகளையும் உடனே பெற வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி மக்கள் முகாம்கள் அமைக்கிறது.
அந்த முகாமில் பட்டா மாறுதல் தொடங்கி, ரேஷன் கார்டு மாறுதல் வரை பல்வேறு பணிகளை மக்கள் எளிதாக செய்து கொள்ள முடியும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொதுவினியோகத் திட்டசெயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்வதற்கும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடக்கிறது.
ரேஷன் கார்டு திருத்தம்: முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு வேண்டுதல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு விண்ணப்பம்; ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இனி விண்ணப்பித்தால் உடனே ரேஷன் கார்டு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்த சில மாதங்களில் புதிதாக ரேஷன் கார்டு ஏராளமானோருக்கு தரப்பட உள்ளது. இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவை தற்போது தொடங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த வீடுகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு சென்று வருகிறார்கள். எனவே புதிய ரேஷன் கார்ட கேட்டு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications