ஆடிக் கிருத்திகை.. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு.. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
Recommended Video

பழனி: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர், திருத்தணி, பழனி உள்ளிட்ட அறுபடை கோவில்களிலும் பக்தர்கள் திரண்டனர். பால் குடம் எடுத்தும் அலகுகள் குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

சென்னை வடபழனி உள்ளிட்ட முக்கியமான முருகண் கோவில்களில் பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்தனர். பல்வேறு வகையான காவடிகள் எடுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
இதே போல், திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விஸ்வரூப தரிசனமும், விளாபூஜையில் சந்நியாசி அலங்காரத்திலும், காலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மலைக்கோயிலில் மாலையில், திருவிளக்கு பூஜையும், தங்கரத புறப்பாடும் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பழனியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் மயில் காவடி, புஷ்ப காவடி ,மலர் காவடி , பால் காவடி, பன்னீர் காவடிகளுடன் குவிந்தனர்.
உடலில் அலகு குத்திக் கொண்டும் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி இன்னிசை பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலில் திரண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications