என்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்- செந்தில்
மதுரை: என்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவியது.இதனால் பலரும் அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்து அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த செந்தில் இதுபோல வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
புகாரில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
செந்திலின் புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் நேரில் வந்து செந்தில் ஒப்படைத்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் ஆஜரானது குறித்து செந்தில் ''என் புகார் குறித்து மேலும் சில விவரங்களை சைபர் கிரைம் போலீசார் கேட்டதால் நேரில் வந்திருக்கிறேன்.
என்மீது அவதூறு பரப்பியவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.