இலங்கை கடற்படையினர் தாக்குதல்… 7 தமிழக மீனவர்கள் காயம்
ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கற்களை எறிந்து தாக்கியதில் 7 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஜெபமாலை என்பவரின் நாட்டுப்படகில் செவ்வாய்க்கிழமை அன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவருடன் ராயப்பன், மரிய திரவியம், மோட்சம், முனியசாமி, முனீஸ்வரன், உமயசுந்தரம் ஆகியோர் சென்றிருந்தனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் அங்கு வந்துள்ளது. இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் எச்சரித்துள்ளனர். பின்னர், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்கள் சென்றது நாட்டுப் படகில் என்பதால் கற்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பாம்பன் அருள் நகரைச் சேர்ந்த ராயப்பன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிகாலையில் கரைக்குத் திரும்பிய மீனவர்கள் ராயப்பனை பாம்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது.