தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கருணாநிதி: இலங்கை அமைச்சர் வேலாயுதம் பேட்டி
சென்னை: ராஜபக்சே மீதான போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தமிழர் பகுதியிலிருந்து உடனடியாக ராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது என்றும் இலங்கை அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் தோட்டக்கலை மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் வேலாயுதம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து சுமார் ஒருமணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு வேலாயுதம் அளித்த பேட்டி: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன். தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கருணாநிதி.
ராஜபக்சே மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். ராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்த தொடங்கியுள்ளது. ஆனால், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை முற்றிலும் விலக்க தற்போது வாய்ப்பில்லை.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பாடச்சாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து பேச இருக்கிறேன். அதற்கு நான் நேரம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications