ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெட்டி படுகொலை: 6 பேர் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் மண்ணூர் பகுதியைச் சேர்ந்த குட்டி (எ) வெங்கடேசன் 55, திருமங்கலம் பகுதியில் புதன்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும் பா.ஜ.க. பிரமுகராகவும் இருந்தார். கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பி.பி.ஜி.குமரன் கொலை வழக்கில் மண்ணூர் குட்டியை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

மண்ணூர் குட்டி ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளராகவும் இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியை மிரட்டியதாக வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து வெங்கடேசன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
மண்ணூர் குட்டி மொளச்சூர் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு இரும்பு கேட் செய்வதற்காக சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் ஆர்டர் கொடுத்திருந்தார். கேட் செய்யும் பணி முடிவடைந்து விட்டதா என்று பார்ப்பதற்காக அக்கடைக்கு தனது காரில் புதன்கிழமை வந்தார். திருமங்கலம் அருகே காரில் இருந்து இறங்கி கடைக்குச் செல்ல முயன்றார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மண்ணூர் குட்டியை கத்தியால் சரமாரியாக தலை, கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டினர். இதில் மண்ணூர் குட்டி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. கொலை நடந்ததும் மண்ணூர் குட்டியின் கார் டிரைவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட மண்ணூர் குட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலதிபரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான குமரன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என சுங்குவார்சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதில் ஒன்றியக் குழுத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது சுங்குவார்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications