254 வக்கீல்களுடன் கோர்ட்டுக்குப் படையெடுத்த மு.க.ஸ்டாலின்- போலீஸ் தடியடி!
திண்டுக்கல்: அதிமுகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆஜரானபோது அவருடன் 254 வக்கீல்களும் ஆஜரானாதால் ஒரே பரபரப்பாக காணப்பட்டது கோர்ட் வளாகம்.
இதற்கிடையே ஸ்டாலினுக்காக வந்திருந்த திமுகவினரை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் பரபரப்பு கூடியது.
சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக கூறி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன், சென்னையிலிருந்து மட்டுமல்லாமல், மதுரை, கரூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 254 பேரும் வந்ததால் கோர்ட்டே கலகலத்துப் போனது.

சென்னையிலிருந்து திமுக வக்கீல்கள் அணி செயலாளர் ஆலந்தூர்பாரதி, முன்னாள் அதிமுக வழக்கறிஞர் ஜோதி, கண்ணதாசன் ஆகியோரும் வந்திருந்தனர்.
இதுபோக, ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுகவினரும் கூடியிருந்ததால் கோர்ட்டில் ஏதோ பொதுக்கூட்டம் நடப்பது போலவே ஒரு பீலிங் இருந்தது.
இந்த நிலையில் ஸ்டாலினை வரவேற்கக் கூடிய திமுகவினர் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். கோர்ட் அருகே ஸ்டாலினை வரவேற்க வைத்திருந்த பேனரை அதிமுகவினர் உடைத்ததால் திமுகவினர் அதைத் தடுக்க முயன்றனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதாக கூறப்பட்டது.
வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே, ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி பாலசுந்தரகுமார்.












Click it and Unblock the Notifications