கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்.. அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு!
ராமநாதபுரம்: என்னை கட்சியிலிருந்து நீக்க முடியுமா, முடியாதா என்று கேட்டு திமுக தலைவர் கருணாநிதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டினார் மு.க.ஸ்டாலின். ஒரு சினிமாப் பட வில்லன் போல அவர் நடந்து கொண்டார். இந்த மிரட்டலுக்குப் பயந்துதான் என்னை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார் எனறு கூறியுள்ளார் மு.க.அழகிரி.
ராமநாதபுரம் வந்த மு.க.அழகிரி அங்கு பேசுகையில் இந்த புதிய பரபரப்புத் தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அழகிரி கூறுகையில், மதுரையில் எனது ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர்கள் ஒட்டியதற்குப் பின்னர்தான் பிரச்சினை வெடித்தது. எனக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் ஆத்திரமடைந்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கினார் ஸ்டாலின்.

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் மணி என்பவர் கட்சியின் சாயல்குடி நகர செயலாளர் வெங்கடேசன் மீது கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்தார். அந்த விஷயம், கருணாநிதியின் கவனத்திற்குக கொண்டு செல்லப்பட்டபோது , வெங்கடேசனின் செயல் தவறு என்று கருணாநிதியே ஒத்துக் கொண்டார். ஆனால் ஸ்டாலின் ஏற்க மறுத்தார்.
மதுரை நகர திமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது வரலாற்றுத் தவறாகும். எந்தக் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின ஒரு சினிமா வில்லன் போல நடந்து கொண்டுள்ளார். என்னை கட்சியை விட்டு நீக்க முடியுமா, முடியாதா என்று கருணாநிதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதற்குப் பயந்தே என்னை கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்தார் தலைவர்.
கருணாநிக்கும், அன்பழகன் காதுக்கும் கட்சியின் எந்தப் பிரச்சினையும் போகாதபடி ஸ்டாலினும் அவரது ஆதரவுத் தலைவர்களும் தடுத்து வருகின்றனர்.
கோவையில் தலைவர் பேசியபோது இதுவே எனது கடைசித் தேர்தலாக இருக்கும் என்று பேசியுள்ளார். எனக்கு இப்போது கவலையாக உள்ளது. மொத்தக் கட்சியுமே அவரை நம்பித்தான் உள்ளது. அவர் இப்படிப் பேசியது சரியல்ல.
ஸ்டாலின் உள்பட பலரும் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் யாரும் கருணாநிதிக்கு சமமாகி விட முடியாது. கருணாநிதி பிறவி பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த தலைவர். எழுத்திலும் பேச்சிலும் கோடானு கோடி மக்களை ஈர்த்தவர் அவர் மட்டுமே. மற்றவர்கள் அவருக்குப் பக்கத்தில் கூட வர முடியாது என்று கூறியுள்ளார் அழகிரி.
கத்தியைக் காட்டி மிரட்டினார் ஸ்டாலின் என்று அழகிரி திடீரென கூறியிருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications