கடலூரை பேரிடர் மாவட்டமாக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட புனரமைப்புக்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மாத கால மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டமே மூழ்கிப் போய்விட்டது. 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அங்கு வெள்ளம் பாதித்த சாத்தப்பாடி, குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, பரதப்பட்டு, விசூர், நெய்வேலி, பாலூர், கே.என்.பேட்டை மற்றும் புதுச்சேரியில் உள்ள தவளைக்குப்பம், ரெயின்போ காலனி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார்.

இயல்பு நிலை திரும்பலை..
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவு செய்துள்ளதாவது:
விவசாய பெருங்குடி மக்கள் பெருமளவிற்கு கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு பல வீடுகள் தண்ணீரிலே மூழ்கியிருக்க கூடிய நிலை, ஏன் சில கிராமங்களே தண்ணீரில் மூழ்கியிருக்க கூடிய நிலை உள்ளது. மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பேரிடர் மாவட்டம்
தொடர்ந்து பலமுறை கடலூர் மாவட்டம் பெருமளவிற்கு பாதிக்கப்படக் கூடிய ஒரு மாவட்டமாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தை ஒரு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு
மானாவரி பயிர்கள், நீண்டகால பயிர்களான பலா, மா, முந்திரி இவைகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து புனரமைப்புகளையும் அரசு செலவிலே செய்து தர வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை அரசு மேற் கொள்ள வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல்..
திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்திருக்க கூடிய கிளை கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரையில் இருக்க கூடிய நிர்வாகிகள் எவ்வித அரசியல் நோக்கம் இன்றி இன்றைக்கு முழு மூச்சாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு பேருதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் இந்த அரசும் கட்சிப் பாகுபாடின்றி எந்தவித அரசியல் காழ்ப்புணர்வும் இல்லாமல், மத்திய அரசு வழங்கியுள்ள நிதியை முறையாக மக்களுக்கு கொடுக்க வேண்டும்

அனைத்து கட்சி குழு
அதை உறுதி செய்ய மாவட்ட அளவிலிருந்து ஊராட்சி அளவு வரை அனைத்துக் கட்சிக்குழு அமைக்க வேண்டும். அதில் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும். அந்த குழுக்களின் மூலமாக நிவாரணப் பொருட்களாக இருந்தாலும், நிவாரண நிதியாக இருந்தாலும் வழங்கினால் தான் அது உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்க கூடிய மக்களுக்கு போய் சேரும். எனவே அந்த முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டுமென்று தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications