தஞ்சாவூரில் வேப்பமரத்தில் பால்-தெய்வச் செயல் எல்லாம் கிடையாது
தஞ்சாவூர்: தஞ்சையில் வேப்பமரத்தில் திடீரென்று பால் வடிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மரத்தை அப்பகுதி மக்கள் தெய்வமாக போற்றி வணங்கி வருகின்றனர்.
காலம்காலமாக வேப்பமரத்தில் பால்வடியும் இந்த நிகழ்வை ஏதோ தெய்வ சங்கல்பமாகவே பார்க்கும் மக்களின் பார்வை மட்டும் இன்னும் மாறவே இல்லை என்பதற்கு இந்த நிகழ்வே மற்றொரு சாட்சி.
தெய்வமான வேப்பமரம்:
தஞ்சாவூர் குறிஞ்சிகுட்டையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது வீட்டின் பின்புறம் பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தை அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று காலை வழக்கம் போல் சாமி கும்பிடுவதற்காக சென்ற ராஜமாணிக்கம் வேப்பமரத்தில் பால் வடிவதைக் கண்டு வியந்தார்.
பால் வடியும் வினோதம்:
இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனையடுத்து வேப்ப மரத்திற்கு பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த பால்வடியும் வேப்பமரத்தை பக்தியுடனும் வணங்கி செல்கின்றனர்.
உண்மையில் தெய்வசக்தி காரணமல்ல:
ஆனால், உண்மையில் இதற்கான காரணம் அவர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.வேப்பமரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீக சக்தியும் காரணமும் அல்ல.
திசுக்களின் சர்க்கரை மாற்றம்:
இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை அதாவது ஸ்டார்ச்சை வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன.
"புளோயம்" செய்யும் மாயம்:
வேப்ப மரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இருக்கிறது.
தண்ணீர் அளவு அதிகம்:
எல்லா வேப்பமரத்திலும் இப்படிப் பால் வருவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால் இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது, பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது, திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்.
திருந்தினால் நல்லதுதான்:
படிப்பறிவு உள்ளவர்களும் இது போன்ற சம்பவங்களின் அறிவியல் காரணங்களை புரிந்துகொள்ளாமல் சிறு பிள்ளைத்தனமாக நடக்கும் விதத்தை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்.