காவிரி பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டிக்க மாநில அரசுக்கு தெம்பு இல்லை - ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு அளித்தும் அதை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது, தீர்ப்பினை கர்நாடக அரசு ஏற்கவில்லை, மத்திய அரசும் செயல்படுத்த தயாராக இல்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று தொடங்கியது. அதனை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்கும் வரலாற்று நடைப்பயணம் தொடங்கியுள்ளது என்று காவிரி மீட்பு பயணத்தை தொடங்கி வைத்து பேசிய கி.வீரமணி கூறினார். மத்திய அரசிடம் உரிமையைதான் கேட்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக சாடினார்.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது, தீர்ப்பினை கர்நாடக அரசு ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்த தயாராக இல்லை. மாநில அரசு எதிர்த்து பேச தெம்பு இல்லாமல் அஞ்சிக்கொண்டிருக்கிறது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஏற்கப்படவில்லை என்றால், தமிழகமே குலுங்கும் வகையில் போராட்டம் நடக்கும். இந்த பயணம் அரசியல் நோக்கத்திற்காக அல்லாமல், நம் உரிமையை பெறுவதற்காக பயணம் நடத்தப்படுகிறது. தீர்ப்பை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, முதல்வர், மத்திய அமைச்சரை கண்டிக்கும் அருகதை தமிழக அரசுக்கு இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
முக்கொம்பில் கொடியேற்றி காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்து நடந்து சென்றார். கம்பரம்பேட்டை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், சர்க்கார்பாளையம், ஒட்டக்குடி, கீழ முல்லைக்குடி, புத்தாவரம், வேங்கூர் பூசத்துறை வழியாகக் கல்லணை அமைந்துள்ள தோகூரில் இன்றைய பேரணி முடிகிறது. இரவு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.
வரும் 9ஆம் தேதி மற்றொரு குழு அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. இந்த பயணத்தையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை 168 கி.மீ. தூரத்துக்கு இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த தூரத்தை 7 நாட்களில் நடக்க உள்ளனர்.இந்தப் பயணம் 13ஆம் தேதி கடலூரில் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications