சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா:381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத விழாவில் விடிய விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது.
சிவகங்கை: முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழாவில் விடிய விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது.
சிவகங்கை அருகே உள்ளது திருமலை கிராமம். இந்த கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற கோயில் மடைக்கருப்பசாமி கோயில். இது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.

அதன்படி கடந்த 14-ம் தேதி அதாவது சித்திரை முதல் தேதி காப்பு கட்டுதலுடன் ஆண்கள் விரதத்தை தொடங்கினர். பின்னர் எட்டாம் நாளான நேற்று முன்தினம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக தங்கள் நேர்த்தி கடனை செலுத்த தயாராயினர். அப்போது தங்களுடன் நேர்த்திகடனை செலுத்துவதற்காக கோயில்காளைகள், வெள்ளாடுகள், அரிவாள், பாத்திரங்களுடன் புறப்பட்டனர்.
முதல்காரியமாக மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலில் தீர்த்தம் எடுத்து மண் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.இதனை தொடர்ந்து ஆடுகளை பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 381 ஆடுகளை வெட்டி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் பொங்கலுடன் வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இறுதியில் சமைத்த இறைச்சி உணவு விழாவில் பங்கேற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ஒரேநேரத்தில் விருந்து பரிமாறப்பட்டது.












Click it and Unblock the Notifications