‘மெல்லிசா ஒரு கோடு’... செண்டம் அடிக்க பிளஸ் 2 மாணவர்கள் போட்ட ‘மாஸ்டர்’ பிளான்!
சென்னை: கடினமாக இருந்த தேர்வுகளில் பெயிலாகி, மறுதேர்வு மூலம் முழு மதிப்பெண்கள் பெற பிளஸ் டூ மாணவர்கள் மேற்பட்ட புதிய தந்திரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது.
தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிப்பில் சேர்வது தான் கனவு, லட்சியம் எனலாம். மற்றவர்களுக்கோ குறைந்த கட்டணத்தில் முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் கவலை. இதற்கு ஒரே தீர்வு அதிக மதிப்பெண்கள் பெறுவது தான்.

சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150-க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். ஆனால், முழு மதிப்பெண்கள் பெற்றால் தான் நல்லது என நினைத்த மாணவர்கள், தங்களது ஆசிரியரின் ஆலோசனைப்படி புதிய தந்திரம் ஒன்றை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது சரியாக எழுதிய அனைத்து விடைகளையும் கோடு போட்டு அழித்து விட்டால், இந்தத் தேர்வில் பெயிலாகி விடலாம். எனவே மீண்டும் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்விற்கு விண்ணப்பித்து, அதில் தேர்வெழுதி 150க்கு 150 மதிப்பெண்கள் பெறலாம் என்பது தான் அந்தத் திட்டம்.
காரணம் பெயிலான மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜூன் மாதத் தேர்வுகள் எளிதாக இருக்கும். எனவே சுலபமாக 150க்கு 150 மதிப்பெண்கள் எடுத்துவிடலாம் என்பது அவர்களது திட்டம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் அல்லது முன்னணி கல்லூரிகளில் எளிதாக சேர முடியும் என்று அந்த மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், செண்டம் அடிக்க இயலாது என நினைத்த தேர்வுகளில் தங்களது விடைத்தாள் முழுவதும் கோடுகளால் அடித்துள்ளனர் சில மாணவர்கள். அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது ஆசிரியர்களின் வழக்கம்.
இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்கள் அதிக அளவில் இருந்ததால், மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் இது தொடர்பாக அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சில பிளஸ்-2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன' என்றார்.
இதனால், மாணவர்களின் திட்ட்ம தவிடு பொடியாகி விட்டது.
மாணவர்களின் இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications