பேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் பஸ்பாஸ் ரத்து... மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வார்னிங்
சென்னை: பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் ஃபுட்போர்டு அடித்துச் சென்றால் அவர்களது இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டுகளில் நின்ற படியே செல்கின்றனர். இதனால், ஏற்படும் விபத்துகளினால் அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், முதல் முறையாக மாணவர்கள் பேருந்துகளில் புட்போர்டு அடித்தால், அவர்களது பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுக்கும்படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, தொடர்ந்து பேருந்தில் ஃபுட்போர்டு அடிக்கும் மாணவர்களின் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அந்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களால் கொண்டாடப்படும் பேருந்து தினத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.