சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது... சு.சாமி அதிரடி!
சினிமாவில் இருந்த அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது, அவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் நடக்காது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : சினிமாவில் இருந்த அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது, அவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் நடக்காது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 2ஜி வழக்கில் ராஜா தண்டனை பெறுவது உறுதி. 2009ல் அலைக்கற்றையின் விலை 10 மடங்கு அதிகம், அரசு எவ்வளவு விலைக்கு அவற்றை ஒதுக்கீடு செய்ததோ, அதைவிட 8 மடங்கு அதிக விலைக்கு ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றுள்ளன.
இதன் அர்த்தம் என்னவென்றால் நிச்சயமாக நாட்டுக்கு இழப்பு நடந்துள்ளது. சில சமயங்களில் இது போன்ற தீர்ப்ப்புகள் வரும். நானும் உச்சநீதிமன்றத்தில் தோற்கும் முன்னர் உயர்நீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறேன், மேல்முறையீட்டில் தான் ஜெயித்தேன்.
அது போல 2ஜி வழக்கிலும் 10 நாட்களில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மேல்முறையீட்டில் நிச்சயம் ஆ.ராசாவிற்கு தண்டனை கிடைக்கும்.
ஜெயலலிதா மரணம் எப்போது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆதாரம் டாக்டர் பி.சி.ரெட்டி தான் அவர் சொல்வதை நான் ஏற்கிறேன், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரெட்டி கூறுகிறார், அவர் நம்பகமானவர் அதனால் எனக்கு ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி உயிரிழந்தாரா, 5ம் தேதி உயிரிழந்தாரா என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல ஜெயலலிதா ஐஸ்கிரீம் சாப்பிட்டாரோ, லஸ்ஸி குடிச்சாரோ என்று சொல்வதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.
வைரமுத்து ஆண்டாளைப் பற்றி ஒரு புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த புத்தகத்தில் அப்படி இல்லையே, வைரமுத்து ஒரு பெண் தெய்வத்தை இப்படி கூறியது மிகப்பெரிய தவறு இதற்கான தண்டனையை அந்த ஆண்டவனே வழங்குவார்.
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்கிறார் ஆனால் அவர் எங்கே வந்தார். அவருடைய திட்டங்கள் எல்லாமே தோல்வி தான். கமல் வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும். சினிமாவில் இருந்து வரும் யாரும் இங்கு உருப்பட முடியாது, தமிழகத்தில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சுப்ரமணியன் சாமி கூறினார்.