ஒரே ஏரியாவில் அடுத்ததடுத்து மர்ம சாவுகள்: பீதியில் பண்ருட்டி மக்கள்
கடலூர்: பண்ருட்டியிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அடுத்தடுத்து பலர் மர்மமான முறையில், இறப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியின், 26வது வார்டு, வி.ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 6 மாதத்திற்கு முன் ஹரிகிருஷ்ணன் (50) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரைத் தொடர்ந்து பிரபாகரன் (20) என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். பிரபாகரன் இறந்த ஒரு மாதத்தில், அவரது தந்தை தேசிங்கு (50) இறந்தார். இதேபோன்று கடந்த 6 மாதங்களில் 8 பேர் திடீரென இறந்துள்ளனர்.
இதுபோக பல தற்கொலை முயற்சிகளும், விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கலியமூர்த்தி மனைவி குமாரி என்பவருக்கு திடீரென சாமி வந்தது. இன்னும் நான்கு இளைஞர்கள் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு முன்பு அம்மனுக்கு பரிகாரம் செய்யுங்கள் என்றும் சாமியாடி கூறினார்.
இதையடுத்து நேற்று மாலையே அந்த ஏரியாவிலுள்ள அம்மனுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. பம்பை, உடுக்கை முழங்க அம்மனுக்கு படையலிட்டு பொதுமக்கள் பரிகாரம் செய்தனர். கெட்ட சக்திகளிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி அப்போது அம்மனை மனமுருகி மக்கள் வேண்டிக்கொண்டனர்.