சூரனை வதம் செய்த சுப்ரமணியர்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற சூரசம்ஹாரத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தினமும் காலையும், இரவும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவில் தங்கரத கிரி வீதி உலா நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (புதன்கிழமை) மாலையில் நடைபெற்றது. மூலவர் சுப்பிரமணியர் வைரக்கீரிடம், தங்க கவசம் அணிந்து, வேலும், கொலுசாயுதமும் தாங்கி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உச்சிகால தீபாராதனை, யாகசாலை மகா பூர்ணாகுதி நடைபெற்றது.
வீரவாளுடன் ஜெயந்திநாதர்
பின்னர், யாகசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வீரவாள் வகுப்பு, வேல்வகுப்பு பாடல்கள் பாட, மேளவாத்தியங்கள் முழங்க பிற்பகல் 2 மணிக்கு சண்முகவிலாசம் சேர்ந்து அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தங்கமயில் வாகனத்தில்
அதன்பின் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்த்திற்கு சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைக்குப் பின், தங்க மயில் வாகனத்தில் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு சூரனை வதம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருளினார்.
சூரசம்ஹாரம்
மாலை 5.25 மணிக்கு முதலில் யானை முக சூரனையும், பின்னர் சிங்க முக சூரனையும், அதனைத் தொடர்ந்து பத்மா சூரனையும் சுவாமி வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை வதம் செய்து தன்னுடல் வேலாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார்.
அரோகரா முழக்கம்
அப்போது கடற்கரையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டனர். தொடர்ந்து கடற்கரை சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.