நாயின் கம்பம்.. தொப்பி கொள்ளையர்கள்.. சின்னத்தை வைத்து ஓ.பி.எஸ் VS சசிகலா கோஷ்டி குடுமிப்பிடி சண்டை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது.
ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு தீவிரமாக உள்ளது.
களத்தில் மட்டுமல்ல, இவ்விரு அணிகளின் சமூக வலைத்தள பிரிவுகளும் தீயாக இறங்கி வேலை பார்க்கின்றன.

கிண்டல்கள்
இப்படித்தான் இரு தரப்பும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை முன்வைத்து வலைத்தளங்களில் கேலி கிண்டல்களை தொடங்கியுள்ளன. என்னதான், இரட்டை மின் விளக்கு என்று பன்னீர்செல்வம் தரப்பு தங்களது சின்னத்தை கூறிக்கொண்டாலும் கூட, அதை மின்கம்பம் என்று கூறி கேலி செய்கிறது டிடிவி தினகரன் குரூப்.

தொப்பி.. தொப்பி..
அதேபோல தொப்பி சின்னத்தை பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. மக்களுக்கு தொப்பி போடுவதை நாசூக்காக சொல்வதை போல உள்ளது இந்த சின்னம் என்பது ஓ.பி.எஸ் தரப்பு சிரிப்புக்கு காரணம். இதையே சமூக வலைத்தளங்களில் பிரசாரமாக முன் வைக்கிறார்கள்.

நாயின் கம்பமா
டிடிவி தினகரன் தரப்பு, வெளியிட்டுள்ள ஒரு மீம், எம்ஜிஆரின் தொப்பியா, அல்லது நாயின் கம்பமா என்ற கேள்வியுடன் உள்ளது. நாய் சிறுநீர் கழிக்கும் மின்கம்பம் போல உள்ளதாக எதிர் தரப்பு சின்னத்தை தினகரன் தரப்பு இப்படி கேலி செய்து பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் உஷார்
இதற்கு எதிராக, ஓ.பி.எஸ் தரப்பு வலைஞர்களும் தீயாய் வேலை பார்க்கிறார்கள். தொப்பியுடன் ஆர்.கே.நகர் மக்களை கொள்ளையடிக்க முகமூடி திருடர்கள் பலே திட்டம். அவசர உதவிக்கு இரட்டை மின் விளக்கை ஒளிரவிட்டு திருடர்களை விரட்டுங்கள் என கூறி அவர்கள் மீம் உருவாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பும் வலைத்தளங்களில் மோதிக்கொள்கின்றன. இரட்டை இலை சின்னத்தை கோட்டைவிட்டுவிட்டு இப்படி இரு தரப்பும் கூச்சமே இல்லாமல் அடித்துக்கொள்கிறார்களே என தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மக்கள்.












Click it and Unblock the Notifications