கோவையில் 3 நாள் தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக மாநாடு
கோவை: கோவையில ஜனவரி 20, 21, 22, ஆகிய 3 தினங்கள் தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் மாலன் வெளியிட்டுள்ள அறிக்கை...
தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது.
கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த மாநாட்டில் 11 நாடுகளிலிருந்து 16 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
அரசு அல்லது அரசியல் அமைப்புக்களைச் சாராத எழுத்தாளர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மாலன் (இந்தியா) ரெ.கார்த்திகேசு (மலேசியா) சேரன்(கனடா) நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) ஆகியோர் அமைப்புக் குழுவினராகச் செயல்படுகின்றனர்.
இருமுறை சாகித்திய அகதாமி பரிசு பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், சென்னை, மதுரை ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றிய நாவலாசிரியர் முனைவர் ப.க.பொன்னுசாமி, ஆகியோர் ஆலோசகர்களாக வழி நடத்துகின்றனர்.
அ.முத்துலிங்கம் (கனடா)) எஸ். பொன்னுதுரை (ஆஸ்திரேலியா) டாக்டர் சண்முக சிவா (மலேசியா) உல்ரிகே நிகோலஸ் (ஜெர்மனி) சவோ ஜியாங் (சீனம்) முத்து நெடுமாறன் (மலேசியா) சீதாலட்சுமி (சிங்கப்பூர்), அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்), வெற்றிச் செல்வி (அமெரிக்கா) அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா) இளைய அப்துல்லா (இங்கிலாந்து) அனார் (இலங்கை) பெருந்தேவி (அமெரிக்கா)) டாக்டர் கிருஷ்ணன் மணியன் (மலேசியா) பேராசிரியர் மணி (ஜப்பான்) திருமூர்த்தி ரங்கநாதன் ( அமெரிக்கா) ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரையளித்துப் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து பேராசிரியர் க.செல்லப்பன், முனைவர் பொன்னவைகோ, கவிஞர்.புவியரசு, முனைவர் ப.மருதநாயகம், முனைவர்.திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர்.இரா.மீனாட்சி, முனைவர் பத்ரி சேஷாத்ரி எழுத்தாளர்கள் மா.லெனின் தங்கப்பா, இந்திரன், பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அமர்வுகள், பங்கேற்போர் குறித்த தகவல்களை மாநாட்டின் இணையதளத்தில் காணலாம் ( www.centerfortamilculture.com ) தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எவர் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பேராளர்களாகக் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
பேராளர்களாகப் பதிவு செய்து கொள்ளக் கட்டணம் ஏதுமில்லை. ஆனால் முன்பதிவு அவசியம். பேராளர்களாகப் பதிவு செய்து கொள்ள விரும்புவோர் www.centerfortamilculture.com . என்ற இணையதளத்திற்குச் சென்று ‘தாயகம் கடந்த தமிழ் பகுதியில் உள்ள பேராளர் பதிவு என்ற பக்கத்தில் பதிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications